செவ்வாய், 6 மே, 2014

மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்


கண்கள் கோளவடிவமானவை. தலையோட்டிலுள்ள கட்குழி களினுள் வைத்திருக்கப்படுபவை. கண் முற்புறமாக மேல், கீழ்க்கண் மடல்களாற்(eye lids) பாதுகாக்கப்படும். கண்ணின் மேற்புறமாக வெளிப்பக்க ஓரத்திற் தோலினுள் கண்ணீர்ச் சுரப்பி(lachrymal gland) அமைந்திருக்கும். கண்ணீரைச் சுரப்பது. கண்ணீர்ச் சுரப்பு மேற்புற உட்பக்க ஓரங்களிற் கண்ணீர்க்கான் துளைகளினூடாகக் கண்ணின் மேற்பரப்பில் விடுவிக்கப்படும். இது தொடர்ச்சியான ஒரு நிகழ்வாகும்.

கண்ணீரிற் காணப்படும் இலைசொஸைம்கள் நுண்ணங்கிகளைப் பாதிப்பவை. கண்ணீர்ப் பிணிக்கையையும்(conjunctiva) விழிவெண்படலத்தையும் (cornea)ஈரலிப்பாக பேணிக் கொள்ளும். கண்கள் கட்குழிகளினுள் நான்கு நேர்த் தசைகள், இரண்டு சாய்வுத் தசைகள் வாயிலாக நிலைப் படுத்தப்பட்டிருக்கும்.

கண் மூன்று படைகளாலானது. வெளிப்புறமாக நார்ப்படையும்(fibrous layer),நடுவில் கலன்படையும் (vascular layer) உட்புறமாக நரம்புக்கலப் படையுமாக(nervous tissue layer) காணப்படும். நார்ப்படை கண்ணின் பிற்புறமான பகுதியில் வன்கோதுருவாகவும் (sclerite), முற்புறமான பகுதியில் விழிவெண்படலமுமாகக் காணப் படும். வனகோதுரு ஒளியூடு புகவிடுமியல்பற்றது. கண்ணின் வெளிப்புறத் தோற்றத்தில் வெண்விழியாகத் தென்படுவது. கட்கோளத்திலன் தோற்றத்தை பேணுவது. உட்புற பாகங்களை பாதுகாப்பது. கட்தசைகள் இணைக்கப்பட்டிருப்பது இப்பகுதியிலேயாகும்.

விழிவென்படலம் ஒளியூடுபுகவிடும் இயல்பினையுடையது. குருதிக்கலன்களற்றது. கண் மாற்றுச் சத்திர சிகிச்சைகளில் மாற்றி நடப்படும் பகுதி இதுவே. விழிவென்படலத்தின் மீதாகக் கட்பிணிக்கை காணப்படும். இதன் அந்தங்கள் மேல், கீழ் கண் மடல்களின்(eye lids)உட்புற ஓரங்களை நோக்கி மடிந்திருக்கும்.

நடுப்படை அல்லது கலன்படை தோலுரு(choroid) பிசிருடல்(ciliary body), ஜரிசு வில்லை என்ற பாகங்களை கொண்டது. தோலுரு பிற்புறமானது. குருதிக் கலன்களையும், நிறப் பொருட்களையும் கொண்ட மென்சவ்வுத் தன்மையான கட்டமைப்பு. குருதிக் கலன்கள் விழித்திரைக்கு குருதி விநியோகம் செய்பவை. போசனைப் பொருட்களையும் ஒட்சிசனையும் விநியோகிப்பவை. கழிவுப் பொருள்களை அகற்றுபவை. நிறப்பொருட்கள் ஒளியை உறிஞ்சி கண்ணினுள் ஒளிக்கதிர்கள் தெறித்தலைத் தடுப்பவை.

தோலுருவின் தொடர்ச்சியாக முற்பக்கத்தில் பிசிருடல் அமைந்திருக்கும். பிசிருடல் தடித்தது. மழமழப்பான தசையிலானது. இது தாங்குமிணையத்தினூடாக வில்லையுடன் தொடர்புற்றி ருக்கும். பிசிருடலினின்றும் நீர்மயவுடனீர் (aqueous humour)சுரக்கப்படும்.

வில்லை குவிவானது. ஒளியூடு புகவிடுமியல்புடையது. தெளிவான குழியவுருவைக் கொண்ட மேலணிக்கலங்களானது. பிசிருடலினின்றும் முற்புறமாக நீட்டப்பட்ட நிலையில் ஜரிசு அமைந்திருக்கும். கருவிழி என குறிப்பிடப்படுவது. மழமழப்பான தசையை , நிறமணிகளைக் கொண்ட வட்ட வடிவான மத்தியிற் துளை கொண்ட பிரிமென்றகடு. இதன் மத்தியிற் காணப்படும் துளை கண்மணி(pupil) எனப்படும். மழமழப்பான தசை வட்ட ஒழுங்கிலும், ஆரைத்திசையிலும் அமைந்திருக்கும். வட்டத்தசைகளுக்கு பரிவுநரம்பு விநியோகமும் காணப்படும் மங்கலான ஒளிச்செறிவு காணப்படும் சந்தர்ப்பங்களில் ஆரைத்தசை சுருங்கி , வட்டத் தசை தளர கண்மணியின் துவாரப்பருமன் அதிகரிக்கும். பிரகாசமான ஒளிச்செறிவின் கீழ்ஆரைத்தசை தளர வட்டத் தசை சுருங்கி, துவாரப்பருமன் குறைக்கப்படும். உள்நுழையும் ஒளியினளவு கட்டுப்படுத்தப்படும் . வில்லைக்கும், விழிவென்படலத்திற்குமிடையே உப்புக்களைக் கொண்ட தெளிவான கரைசலாக நீர்மயவுடநீரும் (visionhumour) வில்லைக்கும் விழித்திரைக்குமிடையே தெளிவான பாகுத்தன்மையான பதார்த்தமான கண்ணாடியுடநீரும் காணப்படும். இவை ஒளிமுறிவிற் பங்கு கொள்வதுடன் , கண்ணினுடைய அமைப்பழிவையும் தடுப்பவை. நீர்மயவுடனீரினின்றும் விழிவென்படலத்துக்கு போசணைப் பதார்த்தங்கள் கிடைக்கும்.

உட்புறமாக படையாக விழித்திரை அமைந்திருக்கும். இது நிறப்பொருட்கலங்கள் ஒளியுணர் கலங்கள், நரம்புக் கலங்கள் என்பவற்றினாலான கட்டமைப்பு கண்ணின் உட்புற மேற்பரப்பில் பெருமளவு பகுதியை படலிட்டுக் காணப்படுவது நிறப் பொருட்கலங்கள் மேலதிக ஒளியை உறிஞ்சுபவை. ஒளியுணர் கலங்கள் மொத்தமாக ஒரு கண்ணில் 126 மில்லியன் வரை காணப்படுபவை. இரண்டு வகையானவை. கோல்க்கலங்கள் , கூம்புக்கலங்கள் என்பவை அவ்விருவகையுமாகும். கோல்க்கலங்கள் 120 மில்லியனும் கூம்புக்கலங்கள் 6 மில்லியனுமாக காணப்படும். விழித்திரையின் முற்பக்கமாக நரம்புக்கலங்களும், பிற்பக்கமாக ஒளியுணர்கலங்களும் காணப்படுவதனால் தலைகீழான விழித்திரை எனப்படுவதுண்டு. வில்லையினுடைய குவியத்தில் கூம்புக்கலங்களைப் பெருமளவிற் கொண்ட மஞ்சளிடம், அல்லது மஞ்சட் புள்ளி அல்லது மையச்சிற்றிறக்கம் எனப்படும். குழிவான பகுதி அமைந்திருக்கும். இதன் மத்தியில் கூம்புக் கலங்கள் செறிந்த “அவல்” (fovea) காணப்படும். இப்பகுதியில் ஒளியுணர்க் கலங்கள் மிகவும் வெளிப்புறமாக இழுக்கப்பட்டிருக்கும். விழித்திரையில் பார்வை நரம்பு உருவாகி வெளிப்படும் பகுதியில் ஒளியுணர்கலங்கள் காணப்படுவதில்லை. இதனைக் குருட்டிடம் (blind spot)என்பர்.

பார்த்தற் தொழிற்பாடு
கோல்க் கலங்கள் மங்கலாகன ஒளிச்செறிவினாலும், கூம்புக்கலங்கள் (cones) பிரகாசமான ஒளிச்செறிவினாலும் தூண்டப்படுபவை. எனவே கோல்கலங்கள் ஒளிக்குக் கூடிய உணர்திறனுடையவை. கோல்க்கலங்களினுள் (Rhodopsin) எனப்படும் நிறப்பதார்த்தம் காணப்படுகின்றது. கூம்புக்கலங்களில் Phodopsin (lodopsin)காணப்படுகின்றது. இவை சிவப்பு, நீலம், பச்சை என்ற மூன்று வர்ணங்களுக்கும் உணர்திறனுடைய மூன்று வகையாகும். ஒரு கூம்பு கலத்துள் யாதாயினும் ஒரு வகை மட்டுமே காணப்படும். இக்கூம்பு கலவகைகள் வெவ்வேறு விகிதத்தில் தூண்டப்படுவதனால் நிறங்கள் உணரப்படும்.

மங்கலான ஒளிச்செறிவின் கீழ் கோல்களிற் காணப்படும் Rhodopsin ஆனது Retinineஆகவும் , Opsinஆகவும் மாறும்.Retinine ஒரு மஞ்சள் நிறப் பொருள், Opsin ஒரு நிறமற்ற புரதம். இவ் ஒளிஇரசாயன மாற்றம் காரணமாகக் கணத்தாக்கம் உருவாகி மூளைய மேற்பட்டைக்கு கடத்தப்படும். விழித்திரையில் உருவாகும் விம்பம் தலைகீழானதும் பக்கமாறானதுமாகும். மூளையினால் விம்பம் உணரப்படும்.

மேற்படி ஒளி இரசாயனத்தாக்கம் மீளுமியல்புடையது. இருளில் முன்முகமாக நடைபெறக் கூடியது. எனினும் மங்கலான ஒளிச்செறிவின் கீழ் நிகழ்ந்த வேகத்திலும் பார்க்கத் தாமதமானது. அத்துடன் உடனடியாக ஆரம்பிக்கக் கூடியதுமல்ல. எனவே இருளிலும் பொருட்களை பார்க்கக் (night vision) கூடியதாகவிருக்கும். இருளிலிருந்து ஒளியை நோக்கியோ, ஒளியிலிருந்து இருளை நோக்கியோ செல்லும் போது சடுதியான பார்வைத்தடங்கல் ஏற்படுவது இதனாலேயாகும்.

இரு விழிப்பார்வையும் முப்பரிமாணப் பார்வையும்
இரண்டு கண்களினதும் வெளிப்புற விழித்திரைப் பகுதிகளினின்றும் தோன்றும் நரம்பு நார்கள் அவ்வப்பக்கத்துக்குரிய மூளைய மேற்பட்டைகளையடையும் ஆனால் உட்புறமான விழித்திரைப்பகுதிகளினின்றும் தோன்றும் நரம்புநார்கள் பார்வைக் கோப்பில் ஒரு பக்கத்திற்குரியவை மற்றப்பக்கத்துக்குரியதை கடக்கும். எனவே ஒரு பொருளினுடைய ஒரு குறித்த பகுதியினால் இரண்டு கண்களினதும் விழித்திரைகளில் உருவாக்கப்படும் விம்பத்தினால் ஏற்படும் கணத்தாக்கங்கள் ஒரேமூளைய மேற்பட்டையை அடைகின்றன.

மூளைய மேற்படையிலுள்ள ஒன்றினைப்பு மையங்கள் இவற்றினை ஒன்றினைப்பதனால், ஒரு பொருள் பற்றிய அதி கூடிய தகவல்களை விளக்கங்களைப் பெறக்கூடியதாகவிருக்கும். பொருளினுடைய நீள அகலங்கள் மட்டுமன்றி, அதன் தடிப்பையும் அல்லது உயரத்தினையும், அதாவது மூன்று பரிமானங்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும். ஒரு பொருளின் நிலையை அறியக் கூடியதாகவிருக்கும். ஒரு பொருள் செல்லும் வேகத்தினை கணிக்கக் கூடியதாகவிருக்கும்

இத்தகைய தோற்றப்பாடுகளையே இருவிழிப் பார்வை (binocular vision)அல்லது முப்பரிமாணப் பார்வை அதாவது திண்மத்தோற்றப் பார்வை என குறிப்பிடுகின்றனர். இன்னொரு வகையில் இரண்டு கண்களதும் பார்வைப் புலங்கள் ஒன்றன மீதொன்pறு மேற்பொருந்துவதனால் பொருளொன்றிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் கண்களிரண்டினதும் மையச் சிற்றிறக்கங்களில் குவிக்கப்படுவதனால் முப்பரிமான பார்வை உண்டாகும்.

தொலைவிலுள்ள பொருளொன்றைப் பார்க்கும் பொழுது அதினின்று வரும் கற்றைகள் இரண்டு கண்களினதும் விழித்திரைகளின் ஒத்த தானங்களில் குவிக்கப்படும். பொருளை நோக்கி அண்மிக்கும் பொழுது மேற்படி ஒத்த தானங்களில் கற்றைகள் குவிக்கப்படுவதற்காக இரண்டு கண்களும் மத்தியை நோக்கி சுழலும். இது கண்ணின் ஒருங்கமைவு அல்லது ஒருங்குகை எனப்படும் இருவிழிப்பார்வையின் பொருட்டு இதுவும் இன்றியமையாததாகும். மனிதக் கண்வில்லை வெவ்வேறு தூரங்களிலுள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் தன்னடைய குவியத் தூரத்தின் அளவை மாற்றக் கூடியது. இத்தன்மை கண்ணின் தன்னமைவு எனப்படும். இதன் பொருட்டு பிசிருடலிலுள்ள தசைகள் சுருங்கித் தளர்கின்றன. தசை நார்களில் செயற்படும் இழுவை வேறுபடும். இவ்வேறுபாடுகளை உணரும் தன்னகம் வாங்கிகள் தசைகளிற் காணப்படும். இவற்றின் மூலம் ஏற்படுத்தப்படும் கணத்தாக்கங்கள் மூளைய மேற்படையினாற் பிரித்து உணரப்படும்.

கோல்கலங்கள் அண்மித்த தெளிவான பார்வைக்கும், கூம்பு கலங்கள் சேய்மித்த தெளிவான பார்வைக்கும் பொறுப்பானவை. இதனாவேலயே கடைக்கண்ணினாற் பார்க்கும் போது அண்மையில் நிகழும் மெல்லிய அசைவுகளையும் உணரக் கூடியதாகவிருக்கின்றது. ஊசியொன்றில் நூல்கோர்க்கும் போது நேராக வரும் ஒளிக்கற்றைகளை மையச் சிற்றிறக்கத்திலே குவிக்கப்படுகின்றன. எனவே நேர் எதிரான பார்வைக்குக் கூம்பு கலங்கள் பொறுப்பானவை. குறைந்த ஒளிர்த் தன்மை கொண்ட பொருட்களைப் பார்ப்பதில் கூம்புக் கலங்களே பங்குகொள்கின்றன. பொதுவாக பகற்கால பார்வைக்கு கூம்பு கலங்களும் இராக்காலப் பார்வைக்கு (night vision)  கோல்கலங்களும் பொறுப்பானவை

பார்வைக் குறைபாடுகள்

குறும்பார்வை 6m தூரத்துக்குட்பட்ட பொருட்கள் மட்டும் தெளிவாக தென்பட்டு அதற்கப்பாலுள்ள பொருட்களினின்றும் வரும் கதிர்கள் விழித்திரைக்கு முன்பாக குவிக்கப்படும் நிலமை குறும்பார்வை (short sightness) எனப்படும். கட்கோளம் நீள்வதனால் அல்லது வில்லை பெரிதும் தடிப்பதனால் அல்லது வில்லைகளது வளைவுகளினளவுகள் அதிகரிப்பதனால் மேற்படி சிலைமை உருவாகும். குழிவு வில்லைகள் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிவதன் மூலம் மேற்படி குறைபாடு திருத்தப்படும.

நீள்பார்வை 6 m தூரத்துக்கு அப்பாற்பட்ட பொருட்கள் மட்டும் தெளிவாக தென்பட்டு அதிலும் குறைவான தூரத்திலுள்ள பொருட்களினின்றும் வரும் கதிர்கள் விழித்திரைக்கு பின்பாக குவிக்கப்படும் நிலமை நீள்பார்வை அல்லது தூரப்பார்வை(far sightness) எனப்படும். கட்கோளம் சிறுப்பதனால்அல்லது வில்லை மெலிவதனால் மேற்படி நிலைமை உருவாகும். குவிவு வில்லைகள் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிவதன் மூலம் மேற்படி குறைபாடு திருத்தப்படும்.

 புள்ளிக் குவியமின்மை விழிவெண்படலம் வில்லை என்பன ஒப்பமான மேற்பரப்பை கொண்டிராமையினால் இது ஏற்படுகின்றது. பொருளொன்றிலிருந்து வரும் கற்றைகள் மையச்சிற்றிறக்கத்தில் குவியமாட்டா. விழித்திரையின் வெவ்வேறு இடங்களிலும் குவிவதனால் விம்பம் தெளிவாக தென்படமாட்டாது. பொருத்தமான உருளை வில்லையை அணிவதனால் இக்குறைபாடு திருத்தப்படும்.

கட்காசம் வில்லை வெண்ணிசமாகி ஒளியூடுபுகவிடும் இயல்பற்றதாக மாறுவதனால் இந்நிலையேற்படுகிறது. தீவிர நிலையில் குருட்டுத் தன்மை ஏற்படும். வேதனை உண்டாக மாட்டாது. இந்நிலையில் வில்லையிலுள்ள ஒளியூடுபுகவிடுமியல்புடைய கலங்கள் சிதைந்து நாரிழையத்தால் பிரதியீடு செய்யப்படும். இந்நிலைமையினை பழுதடைந்த வில்லையினை செயற்கை வில்லையினால் பிரதியீடு செய்வதன் மூலம் திருத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.