சனி, 24 மே, 2014

வரட்சியான சருமம்

உங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி?
சருமத்தைப் பராமரிப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி இன்று பார்க்கலாம்.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?
ஏற்கனவே கடுமையாக வரட்சியடைந்த சருமத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான போதும் உங்கள் சருமத்தை நலமுடன் பாதுகாக்க நிறையவே நீங்கள் செய்யக் கூடியவை பல.
சருமத்தை ஈரலிப்பாக வைத்திருங்கள்.
சருமத்தின் ஈரலிப்பைப் பேணுவதற்கான பல வகை கிறீம்களும், லோசன்களும் இப்பொழுது கிடைக்கின்றன.
இவை மென்படையாக பரவி சருமத்திலிருந்து நீர் வெளியேறுவதைத் தடுக்கின்றன. இவற்றைக் குளித்த உடன் போடுவது நல்லது.
மிகக் கடுமையான தோல் வரட்சியெனில் பேபி ஓயில் போன்ற எண்ணெய் வகைகள் கூடிய பலனளிக்கும். இது கூடிய நேரத்திற்கு உங்கள் சருமத்தை ஈரலிப்பாக வைத்திருக்க உதவும்.
அளவான குளிப்பு
முன்னரே குறிப்பிட்டது போல அதிக நேரம் நீரில் ஊறுவது சருமத்திற்கு கூடாது. எனவே குளிப்பதற்கு அதிக நேரம் எடுக்க வேண்டாம். சாதாரண நீரில் குளிக்கலாம். சுடுநீர் தேவையெனில் கடுமையான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டாம். நகச் சூடு போதுமானது.
சோப்
  • சருமத்திற்கு ஆதரவளிக்கும் மென்மையான சோப் வகைகளைப் பாவிப்பது நல்லது. 
  • கிருமி நீக்கி (antibacterial) மற்றும் காரமான சோப் வகைகள் அறவே கூடாது. 
  • அதே போல மணம் நீக்கிகளும் (deodorant) நல்லதல்ல. 
  • எண்ணெய் மற்றும் கொழுப்புகளை அதிகம் கொண்ட சோப் வகைகள் நல்லது. Neutrogena, Dove போன்றவை அத்தகையவையாகும்.
ஆனால் அதற்கு மேலாக சோப் அற்ற சுத்தமாக்கிகள் கிடைக்கின்றன. Cetaphil, Dermovive Soap Free wash போன்றவை அத்தகையன.
ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வகை ஒத்து வரலாம். அதைக் கொண்டு சுத்தமாக்கிய பின் உங்களது சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருப்பதாக உணர்கிறீர்களோ அதுவே நல்லதெனலாம். மூலிகைகள் அடங்கிய சோப் வகைகள் நல்லதெனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அவற்றிலும் சோப் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்
  • குளித்து அல்லது சுத்தமாக்கிய பின் உங்கள் சருமத்தை மென்மையான டவலினால் ஒத்தியெடுத்து நீரை அகற்றுங்கள். தடிப்பான டவல்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கலாம். 
  • அதே போல அழுத்தித் தேய்த்து துடைப்பதும் சருமத்திற்கு உவப்பானதல்ல. 
  • துடைத்த பின் உடனடியாகவே ஈரலிப்பூட்டும் கிறீம், ஓயின்மென்ட் அல்லது லோசனைப் பூசுங்கள். இதனால் குளிக்கும் போது உங்கள் சருமத்தின் கலங்கள் பிடித்து வைத்திருக்கும் நிர்த் துளிகள் ஆவியாகி வெளியேறாது தடுக்கலாம்.
‘குளித்த பின் குளிர் பிடிப்பதைத் தடுக்கும்’ என சிலர் ஓடிக்கோலோன் போடுவது வழக்கம். இதில் எதனோலும் மணமூட்டிகளும் உள்ளன. இவையும் சருமத்தை அழற்சியடையச் செய்யக் கூடும். சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. எனவே இவற்றையும் வரட்சியான சருமம் உள்ளவர்களும் அது வருவதற்கான சாத்தியம் உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.
உடைகள்
  • சருமத்திற்கு ஏற்றவை பெரும்பாலும் பருத்தி உடைகளே. அவை உங்கள் சருமத்திற்கான காற்றோட்டத்தைத் தடுப்பதில்லை. நைலோன், கம்பளி போன்றவை சருமத்திற்கு ஏற்றவையல்ல. 
  • உடைகளைக் கழுவும் போது கடுமையான அழுக்கு நீக்கிகள், கடும் வாசனை மற்றும் நிறமூட்டிகள் கொண்ட சோப், சோப் பவுடர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவையும் சருமத்திற்கு எரிச்சலூட்டி வரட்;சியாக்கலாம்.
வரட்சியான சருமத்தடன் அரிப்பும் ஏற்பட்டால் சாதாரண கிறீம் வகைகள் போதுமானதல்ல. ஹைரோகோட்டிசோன் கிறீம் வகைகள் தேவைப்படலாம்.
ஆயினும் மருத்துவ ஆலோசனையுடன் உபயோகிப்பது நல்லது. சருமம் சிவந்திருந்தால், தூக்கத்தையும் கெடுக்கக் கூடிய அரிப்பு இருந்தால், சருமத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களில் வலியிருந்தால் அல்லது கடுமையாக தோல் உரிந்து கொண்டிருந்தால் மருத்துவரைக் காண்பது மிகவும் அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.