திங்கள், 12 மே, 2014

குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்.

(ALPM)
குடல் புண் என்றால் என்ன?
நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்

குடல் புண் எதனால் ஏற்படுகிறது?பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.
புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.


சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
கலப்பட உணவு, அசுத்த குடிநீர்,மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.
அதிக காரம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு உண்பதால் வரலாம்
கவலை மன அழுத்தம் காரனமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம்
குடல் புண் எத்தனை வகைகள்?
குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
வயிற்றில் வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .(Gastric ulcer)
சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.(Duodenal ulcer)
பொதுவாக இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்பார்கள்
குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வலியிருக்கும். சாப்பிட்ட பின் இந்த வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர். மாறாக வலி அதிகரித்தால் அது கேஸ்ட்ரிக் அல்சர்.
வாந்தி ,குமட்டல் ,வாயுக்கோளாறு, உடல் எடை குறைதல் சாப்பிடும் விருப்பமின்மை, காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வும் இருந்தால் குடல் புண்ணுக்கான அறிகுறி. இந்தப் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதன் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலி காலை உணவுக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் அமில நீர் வாந்தியாவதும் உண்டு.


குடல் புண் வலியோடு மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் இல்லாவிட்டாலும் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.

ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. 

பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள் பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வு குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.
தேவைப்படும் டெஸ்ட் என்ன?
குடல் புண் இருப்பதாக தோன்றினால் வாய் வழியாக் குழாய் செலுத்தி செய்யப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் திசு மாதிரி எடுத்து (பயாப்ஸி) சோதனை செய்து அது எந்த மாதியான புண் என உறுதிப் படுத்திக்கொண்டு அதற்கேற்ற சிகிட்சை செய்வது ‘நல்லது.
குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளிலிருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், பாமாடிடின், சுரால்பேட் முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபாரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் சாப்பிட வேண்டும்.
மருத்துவம் செய்யாவிட்டால்?
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், இரத்தக் கசிவும் ஏற்படும். இதனால் , கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், ஆஸ்ப்ரின் போன்ற வலி நிவாரணி சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான இரத்தப் போக்கோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடி வயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து , வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது.

வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..
நாள் பட்ட அல்சர் புற்று நோயாக மாறுமா?சாதாரணமாக டியோடினல் அல்சர் அல்லது காஸ்ட்ரிக் அல்சர் புற்று நோயாக மாறுவதில்லை. ஆனால், எச் பைலோரி கிருமிகள் நீண்ட நாட்கள் வயிற்றில் தங்கியிருந்து அலர்ச்சி ஏற்பட்டு முற்றிய நிலையில் (Chronic Gastiritis) 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து புற்று நோயாக மாறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை

செய்யக்கூடாதவை
புகைபிடிக்கக் கூடாது.
மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது. 
வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
அதிகமாகச் சாப்பிடக்கூடாது.

பட்டினி கிடக்ககூடாது. 
காரம் ,எண்ணையில் பொரித்த உணவுகள் உண்பதை குறைக்க வேண்டும். 
பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும். 
சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது. 
சாப்பிட்டவுடன் முன் பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
மனநிலையை தடுமாற விடக் கூடாது.
அவசரப்படக் கூடாது.
கவலைப்படக் கூடாது.
மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் படுக்ககூடாது


செய்ய வேண்டியவை
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
இருக்கமாக உடை அணியக் கூடாது.
மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
மன இறுக்கத்தை விடுத்து மனமகிழ்சியோடு இருக்க வேண்டும்.
அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும்.
சுகாதாரத்தை பேண வேண்டும்.

சாப்பிட வேண்டியவைபொரித்த அல்லது தாளித்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. எனினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.
சத்தான சரி விகித உணவு.
குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. 

இருப்பினும், பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. 
தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கி விட வேண்டும்.
மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.