வியாழன், 8 மே, 2014

இருதயத்தில் துவாரங்கள் உள்ள குழந்தைகள் - Hole in the heart



குழந்தைகள் சில துரதிஷ்டவசமாக பிறப்பிலேயே இருதயத்தில் சில குறைபாடுகளுடன் பிறந்து விடுகின்றன. அவற்றுள் இருதயத்தில் ஏற்படும் ஓட்டை சர்வ சாதாரணமானது. இதனால் இரத்தோட்டம் சாதாரணமாக நிகழ்வதில் தடங்கல் ஏற்பட்டு உடல் உள வளர்ச்சியில் பல தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

இருதயத்தை வலது இடது பகுதிகளாக பிரிக்கும் தசைச் சுவரில் குழந்தை பிறக்கு முதலேசிறு துவாரங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இத்க் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதையத்தின் வலது பக்க அறைகள், இடது பக்க அறைகளுடன் எதுவித தொடர்பும் இன்றி காணப்பட வேண்டும். ஆனால் சில குழந்தைகளில் சிறு துவாரங்கள் ஏற்பட்டு தொடர்பை ஏற்படுத்தி விடுகின்றன. இடது பக்க அறைகளில் ஒக்ஷிசன் மிகுந்த சுத்த இரத்தமும், வலது பக்க அறைகளில் காபனீர் ஒக்க்சைடு மிகுந்த அசுத்த இரத்தமும் வந்து போகின்றன. இவை இரண்டுக்கும் இடையேதுவாரங்கள் ஏற்பட்டு தொடர்புகள் ஏற்படும் போது இரண்டு இரத்தங்களும் கலப்பதுடன், அவை செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்லமுடியாதும் போகின்றன,

இத் துவாரங்கள் சிலவேளைகளில் வலதும் இடது மேலறைகளுக்கு இடையிலும் (atrial septal defect - ASD), அல்லது வலதும், இடது கீழ் அறைகளுக்கு இடையிலும் (ventricular septal defect - VSD) ஏற்படுத்துகின்றன. ஆனால் அவை இருதயம் வளர வளர சிறிய துளைகள் இதைய்ச் சதைகளின் வளர்ச்சியால் தானாகவே மூடப்பெற்று விடுகின்றன. ஆனாலும், பெரிய துளைகளாயின் முற்றாக அடைபடுவதற்கு சந்தற்பம் குறைவாகவே உள்ளன. அப்படியான சந்தற்பத்தில் தகுந்த சத்திர சிகிச்சைமூலம் அவற்றை அடைத்து விடாலாம்.

இருதயத்தில் ஏற்படும் துளைகளை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்:
செகுண்டம் - Secundum: இவ் வகை துளைகள் வலது, இடது அறைகளை பிரிக்கும் நடுப்பகுதியில் காணப்படுவது. இவ் வகைத்துவாரங்கள் பொதுவாக பிறக்கும் 10 குழந்தைகளில் 8 குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றன. அவற்றில் அரைவாசிக்கு மேற்பட்ட துவாரங்கள் குழந்தையின் சிறு பராயத்தில் தானாகவே மறைந்து விடுகின்றன.


பிரிமம் – Primum: இவ்வகை துவாரங்கள் இருதயத்தின் மேல், கீழ் அறைகளை தொடர்புபடுத்தும் வால்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கும். இவ் வகை துவாரங்கள் பொதுவாக ஏற்படுவது குறைவு, அத்துடன் இவை தானாக அடைபடவும்மாட்டாது.

சைனஸ் வேனொசஸ் – Sinus venosus: இவை இருதயத்தின் வலது மேலறைக்கு உடம்பின் பல பாகங்களிலிருந்தும் கொண்டுவரப்படும் நாளத்திற்கு அண்மையில் காணப்படும். இவ் வகைத் துவாரங்கள் மிகவும் அரிதாகவே காணப்படும்.. இவையும் தானாக மறைந்து போகாத துவாரங்களாகும்.

இதயத்தில் பழுது (துவாரங்கள்) இருப்பதை எவ்வாறு அறியலாம்?
குழந்தை அழும்போது உடல் நீல நிறத்தில் மாறும்போதும், குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிப்பதன் மூலமும், குழந்தை பாலை தாயிடம் இருந்து உறிஞ்சிக் குடிக்க இயலாது போகும்போதும் இதயத்தில் அல்லது நுரையீரலில் வியாதி இருக்கிறதா என்பதை சிறப்புப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சாதாரணமாக உணவு அருந்தலாம். சாதாரணமாக விளையாடலாம். சாதாரணமாக மற்ற குழந்தைகளைப் போலவே எல்லாம் செய்யலாம். அவர்களது வளர்ச்சியும், உடல் எடை, பருமன் போன்றவையும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்றால் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

என்னென்ன நடவடிக்கைகள்?
1. குழந்தைக்கு எப்போதும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரையே கொடுக்க வேண்டும்.

2. சளி, காய்ச்சல் போன்றவற்றின் முதல் அறிகுறிகளான மூக்கில் நீர் வடிதல், தும்மல், இருமல் போன்றவை ஏற்ப ட்ட உடனே மருத்துவரை அணுகி அது சரியாகும் வரை, மருந்து, மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்படி கொடுக்க வேண்டும்.

3. எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தை குளிரில் செல்லக் கூடாது. அவ்வாறு கண்டிப்பாக செல்ல வேண்டிய நிலையில் கம்பளி, சாக்ஸ், குல்லா அணிவித்து குளிர் தாக்காமல், மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண் டும். முடிந்தவரை குழந்தை தாயின் அரவணைப்பிலும் கதகதப்பிலும் பராமரிக்கப்பட வேண்டும்.

4. அனைத்து தடுப்பூசிகளையும் சரியான நேரத்தில் போட வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகுந்த அவசியம். நோய்த் தாக்குதல் இல்லாமல் இருந்தால் உடல் மற்றும் மன வளர்ச்சி சரியானபடி இருக்கும். அப்போதுதான் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதை குழந்தை சாதாரணமாக எதிர்கொள்ள முடியும்.

5. திடீரென்று குழந்தை நோய்வாய்ப்பட்டாலோ உடல் நீல நிறமாக மாறினாலோ, வாந்தி எடுத்தாலோ, முகமோ, பாதமோ அல்லது இரண்டும் சேர்ந்து வீங்கினாலோ, லேசான காய்ச்சல் இருந்தாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

6. குழந்தை சிறுநீர் அதிகம் போக வேண்டி மாத்திரைகள் உட்கொண்டு வந்தால், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி தேவையான அளவு தாராளமாக, பால், பழச்சாறுகள், தக்காளி, வாழைப்பழம், இளநீர் மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீர் கொடுக்க வேண்டும்.

7. தாய்ப்பால் ஒரு குழந்தையின் பிறப்புரிமை. அது கிடைக்காதபோது மருத்துவரின் ஆலோசனைப்படி மாட்டு ப்பாலோ அல்லது நீர் சேர்த்த எருமைப்பாலோ மற்றும் பால்
பவுடர் போன்றவற்றினை கொடுக்கலாம்.

8. வளர்ந்த குழந்தைகளுக்கு, சாதாரண அளவில் சாப்பிட இயலாதபோது, அடிக்கடி குறைந்த அளவில் உணவு மற்றும் திரவங்கள் கொடுக்க வேண்டும். மிகக் குறைந்த அளவே சாப்பிடும் குழந்தைகளுக்கு வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை உணவோடு சேர்த்துக் கொடுத்தால் உடலுக்குத் தேவையான கலோரிகள் குறைந்த அளவு உணவிலேயே கிடைக்கும்.

9. குழந்தை ஒரு இட்லி மட்டும்தான் சாப்பிடும் என்று இருந்தால் அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், மூன்று இட்லி சாப்பிட்ட சக்தி கிடைக்கும். குறைந்த அளவில் சாப்பிட்டாலும் நிறைந்த சத்தும், நிறைய கலோரிகளும் கிடைக்கும் வண்ணம் குழந்தைகளுக்கு ருசியான பிடித்த உணவாகக் கொடுக்க வேண்டும்.

10. குழந்தைகளுக்கு உப்பைக் குறைவாக கொடுக்க மருத்துவர் பரிந்துரைத்தால் உணவு தயாரிக்கும்போது சாதாரண அளவிலே உப்பு போட வேண்டும். ஆனால் அதிக உப்பு சேர்த்துள்ள உணவுப் பண்டங்களான ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றையும், நூடுல்ஸ்,
பேக்கரி தயாரிப்புகள், எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள், அப்பளம், ஊறுகாய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

11. உப்பு அறவே இல்லாத பொருட்களை சாப்பிடச் சொன்னால், உணவுக்கு சுவை ஊட்ட மிளகு, வெங்காயம், பூ ண்டு, இஞ்சி, கொத்துமல்லி, எலுமிச்சை போன்ற பொருட்களை
சேர்த்து சுவையாக தயாரித்துக் கொடுக்கலாம்.

12. சாதாரணமாக இதயத்தில் சிறிய அளவு குறைபாடுள்ள குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்பலாம். பள்ளி வீட்டிற்கு அருகே இருப்பது நல்லது. ஆசிரியரிடம் குழந்தையைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி வைப்பது மிகுந்த நன்மை பயக்கும். நீண்ட தொலைவுப் பயணம் செய்து பள்ளிக்குச் செல்லும்போது பயணக் களைப்பின் காரணமாக குழந்தைக்கு பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம்.

13. குழந்தையை சாதாரணமாக விளையாட அனுமதியுங்கள். இதயத்தில் சிறிய அளவு குறைபாடு உள்ள குழந் தைக்கு எந்தத் தொந்தரவும் வராது. பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மருத்துவரின் அனுமதி அவசியம். சாதாரணமாக குழந்தை தனக்கு மூச்சு வாங்குகிறது என்று சொல்லும்போது விளையாடுவதை நிறுத்த கற்றுக் கொடுக்க வேண்டும்.

14. எப்போதுமே குழந்தையை மிக அதிக பாதுகாப்பு வலையத்தில் வைப்பது தவறு. அவன் மற்ற குழந்தைகளைப் போல தாராளமாக வளர அனுமதியுங்கள். இது தனது உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் நோயை ஏற்றுக்கொள்வதும், நோயுடன்
வாழ்வதற்கு மிகவும் அவசியமான மனத் திடத்தைத் தரும் என்கிறார் பாண்டிச்சேரி செவிலியர் கண்காணிப்பாளர் புஷ்பா ஞானமுத்து.

15. குழந்தை தனது வியாதியைப் பற்றி கேட்கும்போது தெளிவாகவும் பயப்படுத்தாமலும் சொல்லுங்கள். அல்லது அதைப்பற்றி மருத்துவர் என்ன சொல்கிறாரோ, அதை
அவனுக்குப் புரியும் விதமாக சொல்வதன் மூலம் அவனுக்கு தாழ்வு மனப்பான்மையோ, பயமோ வராமல் தடுக்கலாம்.

16. மனதைத் தளர விடாமல், குற்ற உணர்ச்சி இல்லாமல் கடவுளிடம் நம்பிக்கை வைத்து அதை சரி செய்ய அதை என்ன செய்ய முடியும் என்பதை மருத்துவர் மூலம் ஆலோசித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும். சில வியாதிகளுக்கு குறிப்பிட்ட எடை வந்தவுடன் அறுவை சிகிச்சையும், சில சமயம் குறிப்பிட்ட வயது வந்தவுடன் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

17. குழந்தைக்குப் பல்வலி, பல்சொத்தைக்காக, சிறு மற்றும் பெரு அறுவை சிகிச்சை செய்யும்போதும் மருத்துவரிடம் முன்னதாகவே, குழந்தையின் பிரச்னை பற்றிக் கூறினால் அவர் தகுந்த முன் ஏற்பாடுகளையும் சில சிறப்பு மருந்து களையும்
சிகிச்சையின்போது கொடுப்பார்.

18. குழந்தைகளுக்கு அதிக இனிப்பு, சாக்லெட் போன்றவற்றைக் கொடுப்பது, பல் சொத்தை, டான்சில் போன்றவற்றை உண்டாக்கும் என்பதால் அதைத் தவிர்ப்பது மிக நல்லது.

19. வரும் முன் காத்தல் அவசியம் என்பதால் இரத்த சம்பந்தம் உள்ள சொந்தங்களை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும் மிகுந்த நன்மை தரும்.

20. நவீன மருத்துவத்தின் மூலம், தாயின் வயிற்றில் இருக்கும்போதே, பிறந்த ஒரு சில மணி நேரங்களிலேயே, பிறந்த சில நாட்களிலேயே இதய அறுவை சிகிச்சை என்று செய்திகளில் வருவதை பெரிதுபடுத்த வேண்டாம். பெரும்பாலான இதய நோய்களுக்கு 12 வயதிற்கு மேல் சிகிச்சை செய்வதுதான் வழக்கம். உங்கள் மருத்துவர் எப்போது செய்வது என முடிவு செய்வார்.

நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், ஆயுர்வேதம் போன்ற மற்ற மாற்றுமுறை சிகிச்சைகளை மேற்கொள்பவர்களும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வழக்கமான சிகிச்சை
முறைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடரலாம்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்து மாத்திரைகள் அநேகமாக நீண்ட நாட்களுக்குத் தேவைப்படாது. எனவே, அதன்பிறகு குழந்தையை வழக்கமான எல்லா குழந்தைகள் போலவே வளருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.