ஞாயிறு, 18 ஜனவரி, 2015

காது குடையலாமா?





காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம்சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்பமுயன்றபோது, “தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி” என்றாள்.



“என்ன நடந்தது” என விசாரித்தேன். “வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று”என்றாள்.”காது கடித்தால் என்ன செய்வீர்கள்?” விசாரித்தேன். “நெருப்புக்குச்சி, சட்டைப் பின்,இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை” என்றான் கூட வந்தமகன்.காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமிதொற்றிவிட்டது.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான். நீந்தியபிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணிஇயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால்குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது.உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப்பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும்.இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாகநகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம்செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்குகாதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச்செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்றுகாதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ,சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப்பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்றுதடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.


காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ்அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம்செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.