திங்கள், 27 ஜூலை, 2015

கோடையின் வெம்மையைத் தவிர்க்க நன்னாரி!


கோடையின் வெம்மையைத் தவிர்க்க நாம் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறோம். குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவை கோடையின் உக்கிரத்தை தணிக்க உதவுகின்றன. வெம்மையால் ஏற்படும் உடல்சூடு, தலைவலி, வேர்க்குரு, வேனல்கட்டி, அதிக தாகம், நாவறட்சி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் நன்னாரி பெரும்பங்கு வகிக்கிறது. கடைகளில் பெரும்பாலும் நன்னாரி, சர்பத் வடிவில் கிடைக்கிறது.

தாவர அமைப்பு

நன்னாரி ஒரு வெப்ப மண்டல தாவரமாகும். இதன் பெயரே இதன் சிறப்பை உணர்த்தும். நல்+நாறி எனக் கூறலாம். அதாவது நல்ல வாசத்தைக் கொண்டது என்று பொருளாகும். இது கொடி போல தரையில் படர்ந்து செல்லும். நிலத்திற்குள் வேர் ஊடுருவிக் காணப்படும். இலைகள் நீண்டு ஊசி போல் ஒடுங்கி இருக்கும். இலையின் நீளம் சுமார் 8 செ.மீ., அகலம் சுமார் 2 செ.மீ. அளவிலும் காணப்படும். இலையின் நடுவில் வெண்மை கலந்த பச்சையாகவும், ஓரங்களில் கெட்டிப் பச்சையாகவும் காணப்படும்.

வகைகள் நன்னாரி இரு வகைப்படும் என சித்த நூல்கள் குறிப்பிடுகின்றன. சீமை நன்னாரி, நாட்டு நன்னாரி என இருவகை காணப்படுகிறது. சீமை நன்னாரி சுருள், சுருளாக காணப்படும். நாட்டு நன்னாரிதான் எங்கும் அதிகமாகக் காணப்படுகிறது. மாகாளி கிழங்கு வேர் எனவும் அழைக்கப்படும் சீமை நன்னாரி பால்வினை நோய்களைத் தீர்க்கும் வல்லமை உடையதென சித்த நூல்கள் குறிப்பிடுகின்றன. நாட்டு நன்னாரி பானங்கள் தயாரிக்கவும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகின்றன.

பல்வேறு மொழிப்பெயர்கள்

சமஸ்கிருதம் - சுகந்தி, சரிவா, ஆங்கிலம் - கண்ட்ரி சர்ஸப்ரில்லா, இந்தி - சல்ஸா வங்காளம்-அனந்தாமல், தெலுங்கு-பாலசுகந்தி, மகாராஷ்டிரா-உபர்சாரி, மலையாளம் - நறுநன்றி, கன்னடம்-நமதாபெரு, பெர்சியன்-உஷ்பா ஹிந்தி, போர்த்துக்கீசி-உபர்கயா.

இதன் தாவரவியல் பெயர் ‘ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ்’ என்பதாகும்.

தமிழ்ப்பெயர்கள்
நறுக்குமூலம், சுகந்தமூலி, கிட்டிணவல்லி,
இந்திரி , காணறுசாரி

எப்படிப் பயன்படுத்தலாம்?

நன்னாரி வேரும், வேர்த்தோலும் அதிகமாகப் பயன்படுகிறது. இதன் வேரை உலர வைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு பால், தண்ணீரில் கலந்து அருந்தலாம். வேரை நீரில் ஊற வைத்துப் பயன்படுத்தலாம். கஷாயமாகவோ, சர்பத் தயாரித்தோ பயன்படுத்தலாம்.

குணங்கள்

நன்னாரி பசியைத் தூண்டும், வெம்மையைத் தணிக்கும். உடம்பிற்கு குளிர்ச்சியை ஊட்டும். சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்தும். தலைவலி, தலைச்Êசூடு ஆகியவை குணப்படும்.

மருத்துவப் பயன்கள்

நன்னாரி வேரை உலர வைத்து பொடித்து, ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து குடித்துவர சிறுநீர் மஞ்சளாக போவது மாறும். உடல் குளிர்வடையும்.

வேர்ப்பட்டையை உரித்து நீர்விட்டு காய்ச்சி கசாயமாக்கி வடிகட்டி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட, வயிற்றுப்போக்கு நிற்கும். இருமல் குணமாகும்.

வேரை அரைத்து வீக்கங்கள் மேல் போட வீக்கம் வடியும்.

நன்னாரி சர்பத்தை குளிர்ந்த நீரில் கலந்து அருந்த வேர்க்குரு, வேனல் கடுப்பு வராது.

வேரை அரைத்து பாலில் கலந்து குடிக்க, கண் சிவப்பு, கண் சூடு மாறும்.

வேரை நீர்விட்டு காய்த்து அரை டம்ளர் நீரில், சிறிதளவு பெருங்காயம், நெய் கலந்து குடிக்க வாந்தி உணர்வு மாறும்.

வேரை குடிநீர் செய்து குடித்து வர ஆண்மை பெருகும்.

வேரை தூளாக்கி சமஅளவு மல்லித்தூள் கலந்து, சிட்டிகை அளவு காலையில் உண்டுவர பித்தம், குடல் நோய் குணமாகும்.

வேர்ப்பொடியை தேனில் கலந்து அரிப்பு, தேமல் உள்ள இடங்களில் தேய்க்க இவை மாறும்.

குடிநீரில் நன்னாரியை போட்டு குடிக்க சூட்டு தலைவலி, கண்சூடு மாறி உடல் குளிர்ச்சியாகும்.

நன்னாரி வேர்ப்பொடியை, தேனில் குழைத்து காலையில் உண்ண அல்சர் மாறும்.

நன்னாரி வேர்ப்பொடியை பால், டீயில் கலந்து குடிக்க மணமாக, சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.