புதன், 5 ஆகஸ்ட், 2015

கண்களைக் காக்கும் யோகா !

காய்ச்சல் வந்தால் மருத்துவரைப் பார்த்து, அவர் தரும் மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஓரிரு நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடுகிறது. கண்களில் ஏதேனும் பிரச்னை வந்தால், மருத்துவரைப் பார்த்து, கண்ணாடி அணிந்துகொள்கிறோம். பிரச்னை சரியானதும் கண்ணாடியைக் கழட்டிவிட வேண்டும்தானே? ஆனால், ஒருமுறை கண்ணாடி அணிந்தால், அதையே தொடர்கிறோமே ஏன்? ஒருமுறை அணிந்தால், கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?
“கண்ணாடி ஏன் அணிகிறோம்?”
“கண்ணின் முன் பக்கத்தில் இருந்து, பின் பக்கம் வரை அதாவது, கருவிழியில் இருந்து விழித்திரை வரை இருக்கும் விட்டத்தை `ஆக்ஸியல் லென்த்’ (Axial length) என்பார்கள். பிறக்கும்போது 17 மி.மீ இருக்கும் விட்டம், பெரியவர்கள் ஆகும்போது 22.5 மி.மீ வரை அதிகரிக்கும். சிலருக்கு 24 மி.மீ வரைகூட இருக்கும். 22.5 மி.மீ என்ற  இந்த சராசரி அளவைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், பார்வை சரியாகத் தெரியாது. ‘ஆக்ஸியல் லென்த்’ குறைவாக இருப்பவர்களுக்குக் கிட்டப் பார்வையிலும், அதிகமாக இருப்பவர்களுக்குத் தூரப் பார்வையிலும் பிரச்னை இருக்கும். தூரப் பார்வை உள்ளவர்களுக்கு கான்வெக்ஸ் லென்ஸ்களும், கிட்டப் பார்வை உள்ளவர்களுக்கு கான்கேவ் லென்ஸ்களும் பார்வைக் கோளாறைச் சரிசெய்யத் தரப்படும்.”
“கண்ணாடி போட்டுக்கொண்டால், பார்வைக் கோளாறு சரியாகிவிடுமா?”
“கண்ணாடி போடுவதால், நிச்சயம் பார்வைக் கோளாறு சரியாகாது.  நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணில் இருக்கும் லென்ஸ் வழியாக விழித்திரையில் விழும். விழித்திரையில் விழும் இந்த பிம்பம், மூளைக்குச் சென்று பதிந்த பிறகுதான், நாம் அந்தப் பிம்பத்தைப் பார்க்கிறோம். கருவிழிக்கும் விழித்திரைக்குமான இடைவெளி அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ, நாம் பார்க்கும் பிம்பம் சரியாக விழித்திரையில் விழாது.
கண்ணாடி அணிவதன் மூலம், கருவிழி வழியாகச் செல்லும் பிம்பமானது, சரியாக விழித்திரைக்குச் சென்றடைய உதவும். ஆனால், கண்ணின் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக்  கண்ணாடி குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யாது.”
“ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?”
“கிட்டப்பார்வை, தூரப்பார்வை கோளாறுகளை லேசர் சிகிச்சையின் மூலம் சரிசெய்து விடலாம். வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்து புதுக் கண்ணாடி மாற்றிக்கொண்டே இருக்க ஆகும் செலவைவிட, ஒரு முறை செய்யும் லேசர் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவுதான்.”


கண்களுக்கான யோகா

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும். கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.
நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, வலது கையைப் பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டை விரலைப் பார்க்க வேண்டும். இப்போது, கையை மேலே உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது கருவிழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். கட்டைவிரலைப் பார்த்தபடி கையைக் கீழே கொண்டுசெல்ல வேண்டும்.
நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.
நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.
நன்றி-விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.