வெள்ளி, 2 அக்டோபர், 2015

எலும்புகளை காக்க 10 கட்டளைகள்

அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே நிலையில் (Postures) அமரக் கூடாது. உட்காருவதோ, நிற்பதோ, எழுதுவதோ, படம் பார்ப்பதோ, ஓவியம் வரைவதோ எதுவாக இருந்தாலும், அரை மணி நேரத்துக்கு மேல் தொடரக் கூடாது. இடைவெளி விட்டு வேலைகள் செய்வது, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கான முதல் கட்டளை. 
சோம்பலான வாழ்க்கைமுறை, எலும்பு நோய்களுக்கு முக்கியமான காரணம். நடைப்பயிற்சி, மெதுஓட்டம் போன்ற பயிற்சிகளின் மூலம் எதிர் மின்னோட்டம் (நெகட்டிவ் எலக்ட்ரிசிட்டி) உடல் முழுவதும் பாயும். இதனால், கால்சியம் மற்றும் தாதுக்கள் ஈர்க்கப்பட்டு, எலும்புகள் வலுவாகும். மூட்டு, தசை வளைந்துகொடுக்கும் தன்மையைப் பெறும்.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி அவசியம் தேவை. சூரிய ஒளி மூலமாகவே வைட்டமின் டியைப் பெற முடியும்.  வைட்டமின் டி மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், அது முழுமையாகக் கிரகித்து உடலுக்குள் செல்ல, சூரிய ஒளி தேவைப்படுகிறது. தினமும் காலை, மாலை இருவேளையும் சூரிய ஒளி அரை மணி நேரமாவது நம் உடலில் படவேண்டும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில், சர்க்கரை நோய்க்கு முதல் இடம். சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், எலும்பு அடர்த்திக் குறைவு வராமல் தடுக்க முடியும்.
எலும்பு தொடர்பான பிரச்னைக்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை, அறிவுறுத்தும் காலம் வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வலி குறைந்ததும் உடற்பயிற்சியை நிறுத்தினால், மீண்டும் பிரச்னைகள் தொடரத்தான் செய்யும்.
மூட்டுகளை வலுவாக்கச் சிறந்த பயிற்சி நீச்சல்தான். தண்ணீருக்குள் இருக்கும்போது, நம் உடல் எடை ஆறில் ஒரு பங்காகக் குறைந்துவிடுகிறது. தண்ணீருக்குள் மூட்டுகளை நன்கு அசைக்கக்கூடிய இலகுத்தன்மை கிடைப்பதால், தசைகள் வலுவடைந்து, மூட்டுக்களின் வளைவுத்தன்மையும் அதிகரிக்கிறது.
எலும்பு தொடர்பான விபத்துகள் ஏற்பட்டால், முழுமையான சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது. விளையாட்டின்போது ஏற்படும் காயங்களை அலட்சியம் செய்யக் கூடாது. ‘சிறிய அடிதானே, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ போன்ற அலட்சியங்கள், அதிக அளவில் எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும்.
மூட்டு வலி, முதுகு வலி, கால் வலி, வீக்கம், முட்டியில் சத்தம் வருதல், காலை எழுந்ததும் கை, கால்களை அசைக்க முடியாமல் இருத்தல் போன்ற பிரச்னைகளை, ஆரம்பத்திலேயே கவனித்தால் எளிதில் சரிசெய்யலாம். அறிகுறிகள் தீவிரமானால், சிகிச்சை தேவைப்படும் நாட்களும் அதிகமாகிவிடும்.
எலும்புகளின் உருவ அமைப்புக்குப் புரதம் தேவைப்படுகிறது. புரதம் நிறைந்த உணவுகளைத் தேவைப்படும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல, எலும்புகள் ஆரோக்கியமாக வைட்டமின் சி, டி, கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். பால், பால் பொருட்கள், கேழ்வரகு, மீன், ஆரஞ்சு, சோயா, அதிக அளவு பச்சைக் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உயரத்துக்குத் தகுந்த எடையைப் பராமரிப்பது, மூட்டுக்களைப் பாதுகாக்கும். அதிக எடையைத் தாங்க முடியாமல், மூட்டுக்கள் தேய்ந்துவிடும் என்பதால், எடை அதிகமாக இருப்பவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், மூட்டுவலி குறைவதை உணர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.