வியாழன், 23 அக்டோபர், 2014

தக்காளி

மூலிகை கட்டுரை

பெண்கள் உட்கொள்வதற்கு ஏற்ற கனி மாதுளம்கனி. மாதவிலக்கின்போது ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டு அத்துடன் வலியும் கடுமையாக இருந்தால் மாதுளம்பழத்தோலை சுட்டு அதன் சாம்பலை தேனுடன் குழைத்து சாப்பிட வலி நீங்கும். அத்துடன் 
தக்காளி பழச்சாற்றையும் குடிக்கலாம்.
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கும்பொழுது தோன்றும் வெப்பம் ரத்தத்தின் மூலமாக பரவலாக நமது தோல் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது. தோலிலுள்ள வியர்வை சுரப்பிகள் மற்றும் நுண்ணிய துளைகள் மூலமாக இந்த வெப்பம் நீராவியாகவும், காற்றாகவும் வெளியேறிவிடுகின்றன. நமது உடலின் வெப்பம் சீராக வெளியேறாவிட்டால் உடல் உறுப்புகளின் செயல்பாடும் ஸ்தம்பித்து போய்விடும்.
ரத்தம் மற்றும் தோலில் தங்கியுள்ள நீர்ச்சத்தே உடலின் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது. ஆனால் நெருப்பு தாக்குதல், கத்தரி வெயில், அனல்காற்று போன்ற காரணங்களால் நமது உடலின் வெப்பம் திடீரென 100 டிகிரிக்கும் மேல் அதிகரிப்பதால் வெப்பத்தின் பாதிப்பு உடலை பல வகைகளில் பாதிக்கிறது. சோடா, மோர், பழச்சாறு, இளநீர், கரும்புச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு, கற்றாழை ஜுஸ், தண்ணீர் பழச்சாறு போன்ற பானங்கள் உடலின் வெப்பத்தை தணிப்பதுடன் நீர்ச்சத்தை நிலைநிறுத்துகின்றன. இதுபோன்ற பானங்களை உட்கொள்ளாவிடில் உப்பு மற்றும் நீர்ச்சத்து உடலில் குறைவதால் கடும் சோர்வு மற்றும் தசை இறுக்கம் உண்டாகிறது. வெயிலின் கொடுமையை தணிக்க காரம் அதிகமுள்ள உணவுகளை குறைப்பதுடன் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். குறைந்தது 3 முதல் 5 லிட்டர் நீர் அருந்தவேகுடும். வெயிலில் வேலை செய்யும்பொழுது அடிக்கடி நீர் அருந்தினால் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்கலாம். கோடையின் கொடுமையை தணிக்க விலை மலிவான, எளிதில் கிடைக்கக்கூடிய தக்காளிப்பழச்சாற்றை உட்கொள்ளலாம். சீனி அல்லது குளூக்கோஸ் கலக்கப்பட்ட தக்காளிச்சாறு உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்துவதுடன் உடலையும் குளிர்ச்சி செய்கிறது.
லைக்கோபெர்சின் எஸ்குலன்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சோலனேசியே குடும்பத்தைச் சார்ந்த நன்கு பழுத்த சீமைத் தக்காளிப்பழத்தில் லைக்கோபீன் வகை கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புற்றுநோய் செல்களை தடுக்கின்றன. தக்காளிப்பழச் சாற்றிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்பு சத்தை நிலைநிறுத்துகின்றன. தக்காளிப்பழச்சாற்றிலுள்ள வலி நிவாரணத் தன்மை உடல் வலியையும் குறைக்கிறது. குறைந்தளவில் நன்கு நீரில் கலக்கப்பட்ட, இனிப்பூட்டப் பட்ட தக்காளிச்சாற்றை தொடர்ந்து குடித்துவர கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் நீங்கும்.
தக்காளியைப் பிழிந்து, விதை மற்றும் தோலை நீக்கி, வடிகட்டி, வெறும் சாற்றுடன் கற்கண்டு அல்லது சீனி கலந்து சாப்பிடுவதாலும், நன்கு பழுத்த தக்காளிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சீனி கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதாலும் உடல் உஷ்ணம் தணியும். தக்காளியை சூடு செய்யாமல் வடிகட்டி அப்படியே சாப்பிடுவதால் சிறுநீர் கிருமித்தொற்று நீங்குகிறது. ஆனால் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதையில் சுண்ணாம்பு, யூரிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் சத்து சேகரிக்கப்பட்டு, கற்கள் உண்டாகிவிடுகின்றன. ஆகவே பச்சை தக்காளிச்சாறு உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து வெப்பத்தாக்குதலை நீக்க தக்காளியை அடிக்கடி உட்கொள்ளலாம். தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை மற்றும் புராஸ்டேட் கிளான்டில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும் உண்டாகும்.
தக்காளி
அசைவ உணவுகள் செரிமானமாக குறைந்தது 90 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் காய்கறிகள் மற்றும் பழச்சாறுகள் உட்கொண்ட 15-20 நிமிடங்களில் செரித்துவிடுகின்றன. ஆகவே அசைவ உணவைவிட சைவ உணவை நம் உடல் எளிதில் ஏற்றுக்கொள்கிறது. காரட், பீட்ரூட், புடலை, பீன்ஸ், வெள்ளரி, முட்டைகோஸ், வாழைத்தண்டு, திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக இடித்து சாறெடுத்து அத்துடன் இஞ்சி சாற்றின் தெளிநீரை கலந்து சாப்பிட உடல் குளிர்ச்சியடைவதுடன் உணவுப்பாதையின் செரிமான ஊக்குநீர்கள் நன்கு சுரக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.