வியாழன், 17 ஜூலை, 2014

நிலவேம்பு பயன்கள்

நிலவேம்பு பயன்கள்

ஜுரம் வலி நீங்க

இந்த கசப்பான மூலிகை பல பயன் களை உடையது. பல நூற்றாண்டுகளாக ஜீரண மண்டலம், சுவாச மண்டல கோளாறு களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. சரியான அளவில் கொடுக்கப் பட்டால் நிலவேம்பு பல நோய்களுக்கு மருந்தாகும் என்கிறது ஆயுர்வேதம்.

நிலவேம்பு வருடாந்திர செடி. கிளைகளுடன் 1/2-1 மீட்டர் உயரம் வரை வளரும். தண்டு உருண்டு, வழவழப்பாகவும் பழுப்பு நிறமாகவும் இருக்கும். இரு வகைகள் - சீமை (சூரத்) நிலவேம்பு மற்றும் நாட்டு நிலவேம்பு. நாட்டு நிலவேம்பு 1/2 மீட்டர் உயரமாக, நான்கு மூலைகள் உள்ளதாக சிறிது கறுப்பாக இருக்கும். (எனவே காலமேக் என்ற பெயர்). இரண்டு வகை வேம்புகளின் பயனும், குணமும் ஒன்று தான்.

பயன்படும் பாகங்கள் - இலை, தண்டு

பொதுவான குணங்கள் - பசியை தூண்டும், டானிக், உடலுக்கு உரமேற்றும். வெப்பம் உண்டாக்கும்.

தாவரவியல் பெயர் - Andrographis Paniculata

குடும்பம் - Acanthaceae

சமஸ்கிருதம் - பூ நிம்பா, இந்தி - கிராயத், இதர பெயர் - காலமேக் (Kalmegh)

தென் கிழக்கு ஆசியாவில் பரவலாக பயிரிடப்படுகிறது. இந்த பயன் தரும் மூலிகை. சீனாவிலும், தாய்லாந்திலும், மேற்கிந்திய தீவுகளிலும் அதிகமாக பயிரிடப்படுகிறது. நல்ல திடமான தாவரமானாதால், எல்லா வகை மண்களிலும் விளையும், வேறு தாவரங்கள் விளையாத பூமியிலும் நிலவேம்பு வளரும்.

கசப்பான Andrographolide எனும் மருந்துப் பொருள் உள்ளது நிலவேம்பு.

நிலவேம்பு பயன்கள்

ஜுரம், வீக்கம் (அழற்சி), ஜலதோஷம் இவற்றுக்கு 'ஆஸ்பிரின்' மருந்து போல நிலவேம்பு செயல்படுகிறது. 15 கிராம் நிலவேம்பு + கிச்சிலித்தோல் 195 மி.கி. + கொத்துமல்லி 195 மி.கி இவற்றை வெந்நீரில் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து, பிறகு வடிகட்டி, 15 - 30 மி.லி. வரை தினமும் 2 - 3 வேளை கொடுக்கலாம். நிலவேம்பின் ஜுரம் குறைக்கும் திறன், ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. ஒரு கிலோ உடல் எடைக்கு 300 மி.கி. நிலவேம்பில் உள்ள கசப்பு ரசாயனப் பொருள் கொடுத்து வந்ததில் அது அதே அளவு 'ஆஸ்பிரின்' மருந்து போல் செயல்படுகிறது. மூக்கடைப்பு, தொண்டைப்புண், காதுவலி, தலைவலி, இவற்றுக்கும் நிலவேம்பிலிருந்து எடுக்கப்பட்ட கசப்புப் பொருள் மருந்தாகிறது. உடல் அழற்சி, இரணங்களையும் ஆற்றுகிறது.

நிலவேம்பு சாறு அல்சருக்கும் நல்ல மருந்து. குடலில் அதிக அமிலச் சுரப்பை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். பேதியை நிறுத்தும் திறனுடையது. லோபர் மைட் (அ) லோபோமை (Loperamide) என்ற அலோபதி பேதி மருந்து அனைவருக்கும் தெரிந்த மருந்து. நிலவேம்பின் இராசாயனப் பொருட்கள் இந்த மருந்துக்கு இணையாக செயலாற்றி பேதியை நிறுத்துகிறது. நாள்பட்ட பெருங்குடல் அழற்சிக்கு நல்ல மருந்தாகும்.

கல்லீரலை காக்கும் மருந்துகளில் ஒன்று நிலவேம்பு. கல்லீரல் கோளாறுகளுக்கு உள்ள ஆயுர்வேத மருந்துகளில், 26 மருந்துகளில் நிலவேம்பு சேர்க்கப்படுகிறது. மது அருந்துதல், நச்சுப் பொருட்கள் இவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுவது எதிர்க்கிறது. பித்த நீர் சுரப்பை அதிகப்படுத்தும்.

நிலவேம்பு பேக்டீரியா, வைரஸ் இவற்றுக்கு எதிரி. யானைக்கால் வியாதிகளை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும். உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தின் வெள்ளையணுக்களின் திறனை மேம்படுத்தும்.

ஆயுர்வேதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.