சனி, 26 ஜூலை, 2014

மச்சம் அதிகம் இருப்பவர்கள் நீண்டகாலம் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கலாம். ஆய்வில் தகவல்

உனக்கு என்னப்பா நீ மச்சக்காரன் அதான் உனக்கு அதிர்ஷ்டம் அடிக்குது என்று மச்சத்தை அதிர்ஷ்டத்துடன் தொடர்ப்பு படுத்தி பேசுவார்கள். ஆனால் மச்சம் அதிகமிருந்தால் நீண்டகாலம் இளமையோடு இருக்கலாமாம்.

மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். இது மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப்புள்ளி ஏற்படுகிறது, இதுவே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். ஒரு சிலருக்கு ஒன்றிரண்டு மச்சம் இருக்கும். ஒரு சிலருக்கு 40 முதல் 50 மச்சம் வரை இருக்கும். ஆனால் 600 மச்சம் வரை இருப்பவர்களும் உலகத்தில் இருக்கின்றனர்.

மச்சம் இருக்கும் இடத்தைப் பொருத்து ஒரு சிலர் பலன் கூறுவார்கள். ஆனால் மச்சம் பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மச்சம் இருப்பவர்கள் நீண்டகாலம் இளமையோடு ஆரோக்கியமாக இருக்கின்றனராம். அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? அப்ப நீங்க ஆரோக்கியமானவர்தான். நான் சொல்லல. ஆய்வாளர்கள் சொல்றாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.