புதன், 22 ஏப்ரல், 2015

மருத்துவ டிப்ஸ், நான்தான் இருமல் பேசுகிறேன்.


நான்தான் இருமல் பேசுகிறேன். என்னைப் பற்றி சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கேளுங்கள்.

என்னை தமிழில் இருமல் என்றும் ஆங்கிலத்தில் காஃப் (COUGH) என்றும், வடமொழியில் காசம் என்றும், மலையாளத்தில் சொமா என்றும் அழைத்து வருகின்றனர்.

காசம் என்றால் தொண்டையிலிருந்து மணி ஓசைபோல வாய் வழியாக ஒரு வித சப்தம் போன்று வெளிவருவதால் எனக்கு காசம் எனப் பெயர் கொடுத்துள்ளார்கள்.

நான் உங்களைத் தொந்தரவு செய்வதற்கான காரணங்கள், ஒவ்வாத உணவுப் பதார்த்தங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவதாலும், அசுத்தமான புகை மற்றும் தூசுகளை நீங்கள் சுவாசிப்பதாலும், மிகவும் வறட்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும், சிறுநீர், மலம், தும்மல் போன்ற இயற்கையான வேகங்களை கட்டுப்படுத்துவதாலும்தான் நான் உங்களை தொந்தரவு செய்கிறேன்.

நான் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு முன் சில அறிகுறிகளை உங்கள் உடம்பில் ஏற்படுத்துவேன். அவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.

உங்கள் தொண்டையில் முள் குத்துவது போன்று ஒருவித எண்ணம் தோன்றும், தொண்டையில் அரிப்பு, உணவை விழுங்க முடியாமை போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிப்பேன்.

சிலர் இருமுவதற்கு வெட்கப்பட்டு, கட்டுப்படுத்த முயல்வார்கள். அப்படி முயன்றால் எனக்குக் கோபம் ஏற்பட்டு, எனது வேகத்தை அதிகப்படுத்தி விடுவேன். அதுமட்டுமல்லாமல் மூச்சிறைப்பு, ருசியின்மை, இருதய நோய், விக்கல் போன்ற நோய்களை ஏற்படுத்தி விடுவேன். ஐ£க்கிரதை!

எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து நபர்கள். அதாவது நான் உங்களை ஐந்து வகையில் தொந்தரவுபடுத்துவேன். அவை, வாதத்தினாலும், பித்தத்தினாலும், கபத்தினாலும், அடிபடுவதாலும் மற்றும் உடல் இளைப்பாலும் நான் உங்கள் உடம்பில் தோன்றி துன்புறுத்துவேன். சரி, என் குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறேன். கேளுங்கள்.

1. வாத இருமல்

நான் உங்களை வாதம் அதிகமாவதால் தொந்தரவுபடுத்துவேன். நெஞ்சு வலி, வயிற்றுவலி, தலைவலி, வறண்ட இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவேன்.

2. பித்த இருமல்

நெஞ்சு எரிச்சல், காய்ச்சல், வாயில் கசப்புச் சுவை, தண்ணீர்த் தாகம் போன்ற அறிகுறிகளை பித்தம் அதிகமாவதால் ஏற்படுத்துவேன்.

3. இருமல்

கனமான கோழை, உடல்பருமன், ருசியின்மை போன்ற அறிகுறிகளை கபம் அதிகமாவதால் ஏற்படுத்துவேன்.

4. க்ஷதக்க்ஷினம்

அடிபடுவதால் நான் இருமலை உற்பத்தி செய்வேன். எனது அறிகுறிகள் கோழையுடன் இரத்தம் கலந்து வெளிவரும். நெஞ்சில் ஊசி வைத்துக் குத்துவது போன்ற வலியை ஏற்படுத்துவேன். மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமும்போது பறவையின் குரல் போன்ற சப்தம்.

5. க்ஷய இருமல்

உடல் இளைப்பால் இவ்வகை இருமலை ஏற்படுத்துவேன். (சரிவர சாப்பிடாமல் இருப்பது, அளவுக்கு அதிகமான உடலுறவு ஆகிய காரணங்களால் உடல் இளைப்பு ஏற்படுகிறது.) சலம் போன்று இரத்தம் கலந்த கோழை, உடல் இளைப்பு, உடல் எரிச்சல், உடல் எங்கும் வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவேன்.

இதில் நான் கூறியுள்ள முதல் மூன்று நபர்களையும் நீங்கள் எளிதில் போக்கிவிடலாம். கடைசியில் உள்ள இரண்டு நபர்கள் மிகவும் பொல்லாதவர்கள். அவர்களை நீங்கள் எளிதில் அழிக்க முடியாது.

இதில் வயதானவர்களுக்கு வரும் இருமல், இருமலுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

என்னை நீங்கள் எதிர்க்க மருந்துகள் சாப்பிடாமல் அலட்சியப்படுத்தினால் மூச்சுத் திணறல். உடல் இளைப்பு, வாந்தி, குரல் அடைப்பு போன்ற அறிகுறிகளையும், எலும்புருக்கி நோய் என்னும் காசநோய் கூட ஏற்பட வாய்ப்புண்டு. என் குடும்பத்தினருடைய எதிரிகளைக் கூறுகிறேன் கேளுங்கள்.

= கண்டங்கத்திரி என்ற மூலிகைதான் என் குடும்பத்தின் முதல் எதிரி.

= கண்டங்கத்திரியை கஷாயம் வைத்து திப்பிலிப் பொடியை சேர்த்துச் சாப்பிட்டால் நாங்கள் அழிந்து போய்விடுவோம்.

= பத்து மிளகையும், ஒரு கடுக்காயையும் பொடி செய்து சுடு தண்ணீருடன் இரவில் சாப்பிட்டால் எங்களை நீங்கள் எளிதில் துரத்தி விடலாம். அல்லது மிளகை மட்டும் பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டீர்கள் என்றாலே போதும்.

= திப்பிலி பொடியில் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்களைத் தொந்தரவு படுத்தும் இருமலாகிய நாங்கள் போய்விடுவோம். அதுமட்டுமில்லாமல் இந்த பிரயோகம் மற்றும் சில நோய்களையும் குணப்படுத்தும். அதையும் சொல்கிறேன் கேளுங்கள், மூச்சுத் திணறல், தொண்டை நோய், விக்கல், மண்ணீரல் நோய் போன்றவைகளை குணமாக்கும். இது குழந்தைகளுக்கு மிக நல்லது. ஆனால் தாய்மார்களே குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது, மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

= திப்பிலி பொடியும், இந்துப்பும் சேர்த்து சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டாலும் எங்கள் தொந்தரவு நீங்கும்.

= சிலருக்கு ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதால் ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற உபத்திரவங்கள் ஏற்படும். இதில் எங்களுடைய பங்கும் உண்டு. இதற்கு நீங்கள் மஞ்சளை அரைத்து அரிசி கழுவிய தண்ணீருடன் கலந்து சாப்பிட்டாலே போதும், இடம் விட்டு இடம் பெயர்வதால் ஏற்படும் தொந்தரவுகளுடன், நாங்களும் போய் விடுவோம்.

= ஆடாதொடைச் சாற்றுடன், திரிகடுகுப்பொடி, தேன் இவைகளைக் கலந்து சாப்பிட்டால் எல்லாவித இருமலும் குணமாகும்.

= மோர், சர்க்கரை, திப்பிலிப்பொடி இவைகளை ஒன்றாகக் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

= இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டீர்களானால் இருமலாகிய நான் அழிந்து போவதோடு மட்டுமல்லாமல் காய்ச்சல், ஜலதோஷம், மூச்சுத் திணறல் போன்ற என் நண்பர்களும் அழிந்து போவார்கள்.

= துளசி என்கிற செடி எங்களுக்கு மிக முக்கியமான எதிரி. இந்தச் செடியை இடித்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் போதும் நாங்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுவோம்.

= இன்னும் எங்களுக்குச் சில, பல எதிரிகள் எல்லாம் இருக்கிறார்கள். சிலர் எங்கள் எதிரிகளைத் தயாரித்து விற்பனையே செய்கிறார்கள். உதாரணத்திற்கு, வியாக்ரியாதி கஷாயம், தசமூலக்கடுத்ரயம் கஷாயம், வாஸாரிஷ்டம். தாளீசபத்ராதி சூர்ணம், சிதோபலாதி சூர்ணம், கண்டங்கத்திரி லேகியம் போன்ற மருந்துகள் ஆயுர்வேத, சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் இவற்றை யெல்லாம் ஒரு ஆயுர் வேத மருத்துவர் அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். அப்போது தான் நாங்கள் அழிவோம்.

= முடிவாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் உங்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. நீங்கள் வாழ்க்கை நெறிமுறைகளைத் தவறாக பின்பற்றுவதனால்தான் இருமலாகிய நானும் மற்றும் என்னைப் போன்ற நண்பர்களும் உங்களைத் துன்புறுத்துகிறோம். அதனால் வாழ்க்கையில் உணவுப் பழக்கவழக்கங்கள் முதலான நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி வந்தால் நான் மட்டுமின்றி எந்தவித நோயும் அணுகாது வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.