செவ்வாய், 24 ஜூன், 2014

அபோஷன் என்னும் கருசிதைவும்அதனால் ஏற்படும் பாதிப்பும்



ஒரு பெண் தாயாகும் பேறு மிக அற்புதமானது. ஆனால் தவிர்க்க முடியாத பல சூழ்நிலைகளினால் கர்ப்பமாகும் எல்லா பெண்களுக்கும் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. அதற்கான காரணங்கள் பல இருந்தாலும், தாயின் உடல் நிலை, கருவின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு, கருப்பையில் ஏற்படும் உபாதைகள், வேண்டாத கர்ப்பம் என்பன முக்கியமானவைகளாகும்.
கருச் சிதைவு என்பது கரு வளர்வைதை நிறுத்துதல் அல்லது கருவை சிதைத்தல் அல்லது கரு தானவே சிதைவெய்துதல் என பொருள் பெறும். கருவானது உற்பத்தியாகிய 24 கிழமைகளுக்குள் ஏற்படும்அல்லது ஏற்படுத்தும் கருச்சிதைவு (miscarriage) மிஸ்கரேஜ் என்றும் கருவானது உருவாகி 24 கிழமைகட்கு மேற்ட்டிருப்பின் அக் கருச்சிதைவானது (abortion) அபோஷன் என்றும் அழைக்கப்பெறும்.இக் கட்டுரையில் அபோஷன் என இரு வகை கருச்சிதைவுகளுக்கும் பொதுவாக குறிப்பிடப்பெற்றுள்ளன.
அபோர்ஷன் என்னும் கருச்சிதைவு பொதுவாக இரண்டு சூழ்நிலைகளில் நிகழ்கின்றது. நாமாகவே சில சூழ்நிலை காரணமாக் செய்வித்துக் கொள்வது. அதாவது கணவன் மனைவி தமக்கு பிள்ளைகள் இப்போதைக்கு வேண்டாம் என்ற நிலையில், அல்லது பெற்ற பிள்ளைகள் போதும் எனியும் பிள்ளைகள் வேண்டாம் என்ற நிலையில், அல்லது கள்ளத் தொடர்பால் கர்ப்பமாகிவிட்ட சந்தற்பத்தில் தாமாகவே முன்வந்து கருச்சிதைவு செய்வித்துக் கொள்கின்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் இரண்டு விதமான முறைகளில் கருச்சிதைவு செய்யப் பெறுகின்றன. ஒன்றுமருந்து முறை. மற்றையது ஆயுத சிகிச்சை முறை. ஆயுத சிகிச்சை முறையானது விரைவானது.  மருந்து முறை காலதாமதமாகும்.
தானாக நிகழும் கருச்சிதைவானது, தாயின் உடல் நிலை கரு வளர்ச்சிக்கு ஒவ்வாத போதும், அல்லது கருப்பையில் அசாதாரண நிலை உருவாகி கருவளர்ச்சிக்கு பாதகமாக அமைகின்றபோதும் அல்லது கருவளர்வதில் குறை ஏற்படும்போது அபோர்ஷன் என்னும் கருச்சிதைவு தானாகவோ அல்லது வைத்திய ஆலோசனையின்படி  நிகழ்கின்றது. 
மேற் கூறிய காரணங்களால் தாயானவள் கருவைச் சுமக்க முடியாது போகும்போது அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ”அபார்ஷன்” என அழைக்கிறோம்.
தானாக ஏற்படும் அபோர்ஷனுக்கான பொதுவான காரணங்கள் 
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபோர்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபோர்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபோர்ஷன் ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபோர்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபோர்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபோர்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபோர்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபோர்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.
அபோர்ஷன் வகைகள்
அபோர்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபோர்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபோர்ஷன்
தானாக ஏற்படும் Spontaneous அபோர்ஷனில் பல நிலைகள்: 
1. பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபோர்ஷன் இல்லை. ஆனால் அபோர்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபோர்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஆலோசனை பெற்று ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.
2. முழுமையான கருச்சிதைவு
கருப்பையில் வளர்கின்ற கரு சிதைவடைந்து, அக்கரு மற்றும் அதனை சூழ்ந்துள்ள திசுக்களும் முழுவதுமாக பெண்குறியின் வழியாக வெளியேற்றப்படுவது முழுமையான கருச்சிதைவு எனப்படும். 
இப்படி முழுமையான கருச்சிதைவு எற்படும்போது, இரத்தப் போக்கு கருச்சிதைவுக்குப் பின் சில நாட்களில் நின்றுவிடுகிறது. இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2-4 வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மேலும் இந்நாட்களில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முற்றுப் பெறாத கருச்சிதைவு
சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு / முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும். 
இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும். 
கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற  நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும். 
முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். 
கருச்சிதவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
அடிக்கடி ஏற்படும் அபோர்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபோர்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபோர்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். 
சில பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில சந்தற்பங்களிலும் வி.ஜி.றி. முறையில் அபோர்ஷன் செய்யப்படுகிறது. அவை...
1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...
செப்டிக் அபோர்ஷன் 
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபோர்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள்.
இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபோர்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
குறைப்பிரசவம்/கருச்சிதைவு - தன்னிச்சையாக ஏற்படும் கருச்சிதைவு கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் உள்ள போதும் ஏற்படும் கருச்சிதைவை குறைப்பிரசவம் என்பர். இது முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது.
கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது, அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது. 
எனவே கருச்சிதைவு என்பது மேற்கூறிய குறைபாடுள்ள பிறப்பை தடுக்கும். மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் ஏற்படக்கூடும். 
சில நேரங்களில், கருப்பையில் வளர வேண்டிய கரு, கருவகத்தின்று கருப்பைக்கு கருமுட்டையினை எடுத்துச் செல்லும் மிருதுவான குழலான பெல்லோப்பியன் டியூப் எனப்படும் பகுதியில் வளர்ச்சியடைவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. 
அதே போன்று கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும் ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு அடைகிறது. இம்மாதிரி கருச்சிதைவு ஆபத்தானதும் கூட.
கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால். கரு, சரியான வளர்ச்சி பெறாததால். கருப்பையின் வாய் திறந்திருந்தால்.  சில பெண்களில் கருச்சிதைவானது ஏற்படும். 
ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.
கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதற்கான அடையாளங்கள் 
கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உண்டு. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. 
இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும் பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளிப்படும்.
கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.
தூண்டுதலின் பேரில் கருச்சிதைவு அடையச்செய்தல்
சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாட்களிலேயே செய்ய வேண்டும். 
முதலில் கருவுற்ற பெண்ணிற்கு வலி ஏற்படாமல் இருக்க, வலியை குறைக்கக்கூடிய ஊசியினைப் போட வேண்டும். பின்னர் மருத்துவர் தகுந்த உபரணங்களைப் பெண்குறியின் வழியாகச் செலுத்தி கருப்பையிலுள்ள கருவினைச் சுத்தம் செய்வார். 
இவ்வகை அறுவைச்சிகிச்சை 15 நிமிடங்கள் வரை நடக்கும். இவ்வகை சிகிச்சை முறை, நன்கு பயிற்சி பெற்ற நபரால், தகுந்த உபகரணங்களைக் கொண்டு, சுத்தமான சூழலில் செய்தால் ஆபத்தானது அல்ல. 
இவ்வகை சிகிச்சைக்குப் பின், குளிர் ஜுரம், வயிற்று வலி, இடுப்பு வலி, ரத்தப் போக்கு அல்லது துர்நாற்றம் கலந்த வெள்ளைப் போக்கு ஏற்பட்டால், அப்பெண் உடனடியாக சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கால தாமதம் மரணத்தை விளைவிக்கக் கூடும்.
அபோர்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன் மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபோர்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.
இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபோர்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். 
முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது
தானாக அபோர்ஷன் ஏற்படும்போது தோன்றும் அறிகுறிகள் 
1. சில துளிகள் முதல், அதிகமான ரத்தப் போக்கு வரை ஏற்படுவது.
2. இந்த ரத்தப்போக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லாமலும் ஆரம்பிக்கலாம் அல்லது சிறு கறுப்பு நிறத்தில் படலாம்.
3. அடிவயிற்றில் இழுத்துப் பிடித்தாற் போல வலிப்பது...
4. ரத்தப்போக்கோ அல்லது வலியோ இல்லாமல் பெண் உறுப்பால் நீர்ப் போக்கு ஏற்படுவது. இது பனிக்குடம் உடைந்து விட்டதற்கான அர்த்தம்.
5. பெண் உறுப்பில் இருந்து `தசை' போல் வெளியேறும். இந் நிலையில் முடிந்தவரை டாக்டரைப் பார்த்து பரிசோதனை செய்வது முக்கியம்.
அபோர்ஷன் ஏற்பட்டுள்ளது என்பதனை எவ்வாறு  தீர்மானிப்பது?
உங்களுடைய டாக்டர் உள்பரிசோதனையின் மூலம், கருப்பையின் அளவை பரிசோதனை செய்வார். அதில் உங்களுடைய கருப்பை குறித்த காலப்பகுதியில் இருக்க வேண்டிய அளவை விட சிறியதாக இருந்தால் அபோர்ஷன் ஆகலாம் என்று யோசிப்பார். தவிர அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தாலும் அபோர்ஷன் ஆனதை உறுதி செய்து விடலாம்.
அடிக்கடி அபோர்ஷன் ஏற்பட்டால்..
ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து அபோர்ஷன் ஆகிக் கொண்டேயிருந்தால் அதன் காரணத்தை கண்டறிய அந்தப் பெண்ணும், பெண்ணின் கணவரும் சில பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். 
கருப்பையின் வாய் தளர்வாக இருந்தாலும், கருத்தரித்த நான்கு மாதம் கழித்தும் அபோர்ஷன் ஆகலாம். இந்த நேரத்தில் கருப்பை வலியில்லாமலேயே திறந்து கொள்ளும். (Incompetent Cervix) இதனால் தொடர்ந்து அபோர்ஷனாகிக் கொண்டே இருக்கும். இது குணப்படுத்தக் கூடியதே.
தானாக நிகழும் அபோஷன் சூழ்நிலைகளும் அதற்கான பரிகாரங்களும்
1. த்ரெட்டண்டு அபோர்ஷன்
இந்தப் பிரச்னையில் அல்ட்ரா சவுண்ட் மூலமாக கருவிலிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பை பார்க்க முடிந்தால், அந்த கர்ப்பம் தொடர்ந்து வளர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். த்ரெட்டண்டு அபோர்ஷனில், வலியில்லாத லேசான ரத்தப்போக்கும் ஏற்படலாம். இதற்கு உங்கள் மகப்பேறு மருத்துவர், ஒன்று (அ) இரண்டு நாட்கள் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லுவார். 
இப்படிச் செய்தால் ரத்தப்போக்கு நிற்பதுடன் கர்ப்பமும் தொடர்ந்து நன்றாக ஆரம்பிக்கும். இதுபோன்ற சமயங்களில், நீங்கள் ஏற்கெனவே செய்து வந்த உடற்பயிற்சி, நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, தாம்பத்ய உறவையும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை தள்ளி வையுங்கள். 
த்ரெட்டண்ட் அபோர்ஷன் என்ற இந்தப் பிரச்னைக்கு பல வருடங்களாக ஹார்மோன் மாத்திரையோ அல்லது இன்ஜெக்ஷனோ தேவையில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 
2. இன்கம்ப்ளீட் அபார்ஷன் - (Incomplete abortion)
ரத்தப்போக்கு ஆரம்பித்து கருவின் சில பாகம் மட்டும் வெளியேறினால் ரத்தப்போக்கு அதிகமாகிவிடும். இதற்கு டி அண்ட் சி மூலமாக கருப்பையின் உள்ளே மீதமிருக்கும் திசுக்களை எடுப்பார்கள்.
3. மிஸ்டு அபோர்ஷன் (Missed Abortion)
இதில் கருப்பையில் இருக்கும் கருவானது, எந்தவித ரத்தப்போக்கும் இல்லாமல் இறந்து போயிருக்கும். இது முதல் சில வாரங்களில் ஆகி இருந்தால் மாத்திரைகள் மூலமாகவே கருப்பையை சுத்தம் செய்யலாம். கரு பெரியதாக இருந்தால் `டி அண்ட் சி' அல்லது பிரசவ வலியை ஏற்படுத்தியோ இறந்த அந்தக் கருவையும், நச்சுக் கொடியையும் அகற்றி விடுவார்கள்.
எந்த கர்ப்பமாக இருந்தாலும் உங்களுடைய ரத்த வகையைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ரத்த வகை Rh நெகட்டிவாக இருந்தால், அதற்கான பாதுகாப்பு  ட்ரீட்மெண்ட்டை செய்து அடுத்தடுத்த கர்ப்பங்களில் இதனால் பிரச்னை வராமல் டாக்டர் பார்த்துக் கொள்வார்.

அபோர்ஷனுக்குப் பிறகு எவ்வளவு நாட்கள் கழித்து மறுபடியும் கருத்தரிக்க முயற்சி செய்யலாம்?
அபோர்ஷனுக்குப் பிறகு, உங்களுடைய மகப்பேறு மருத்துவர் 4 வாரங்கள் வரை தாம்பத்ய உறவு வேண்டாம் என்று அட்வைஸ் செய்யலாம். 
3 ல் இருந்து 6 மாதங்கள் கழித்து அடுத்த கருத்தரிப்பிற்கான முயற்சியில் ஈடுபடலாம்.
குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட வேண்டுமென்றால், அதற்கான சரியான கருத்தடை சாதனத்தை உங்கள் டாக்டரே பரிந்துரை செய்யலாம்.
உங்கள் உடல் ரீதியான பிரச்னை ஆறுவது மட்டுமல்லாமல், உங்கள் மனது ஆறுவது மிக முக்கியம். அதன் பிறகு அடுத்த கர்ப்பத்திற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.