வெள்ளி, 2 அக்டோபர், 2015

பாதங்களையும் கவனிங்க…



நாம் முகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேயளவு, பாதங்களை பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உடல் எடை முழுவதையும் தாங்குபவை பாதங்கள். எனவே, பாதங்களின் கீழ்ப்பகுதியில், சிராய்ப்பு, வீக்கம், வெடிப்பு இருக்கிறதா என்று, அவ்வப்போது கவனிக்க வேண்டும். பாதங்களின் சரும நிறம் மாறாமல் இருக்க வேண்டும். ஏதேனும் மாறுதல் தெரிந்தாலோ, கால் விரல்களுக்கு நடுவில் அல்லது கீழே வலி, அரிப்பு அல்லது தொற்று நோய் பாதிப்பு இருந்தாலோ மருத்துவரை அணுகுங்கள். முக்கியமாக, சர்க்கரை நோயாளிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காலை, மாலை இரு வேளையும், பாதங்களை டெட்டால்
கலந்த நீரில் சுத்தம் செய்து, மாய்சரைசர் லோஷன் பூசவும். நகங்களை ஒட்ட வெட்டாமல்,நேராக வெட்டி தேய்க்க வேண்டும். இதனால், நகக் கண்களில் தொற்று ஏற்படுவதும், ஓரங்களில் உள்ள தசைகள், உட்பக்கமாக வளர்ந்து வலியை உண்டாக்குவதும் தவிர்க்கப்படும்.
பெடிக்யுர்: மாதத்திற்கு ஒரு முறை, அழகு நிலையம் சென்று, பெடிக்யுர் செய்துகொள்ளுங்கள். ஆனால், பெடிக்யுரில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள் கொதி நீரில் போட்டு சுத்தம் செய்யப்பட்டதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒரே இடத்தில் நின்றபடி, இரண்டு பாதங்களையும் மாறிமாறி, எதிர் எதிர் பக்கமாக ஐந்து முறை வீதம் சுழற்றவும். மேலும், மாடி படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவதும் நல்லது. தினசரி பாதங்களை உப்பு கலந்த குளிர்ந்த நீர் மற்றும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் மூழ்கும்படி வைத்து எடுங்கள். மேற்குறிப்பிட்டவைகளை முழுமையாக கடைபிடித்து வந்தால், பாதவலி, முதுகு வலி மற்றும் மூட்டு வலி நீங்கும்.
பொருத்தமான காலனியை தேர்ந்தெடுங்கள் தட்டையான பாதம், மூட்டுவலி, குதிகால் மற்றும் இடுப்பு வலிக்கு காரண மாகிறது. இத்தகைய பாதங்களைக் கொண்டோர், செருப்பு தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருப்பது அவசியம்.
சிலரின் பாதங்கள் அதிக வளர்ச்சியடைந்து அகலமாக இருக்கும். இவர்களுக்கு மூட்டு மற்றும் தசை நார்களில் வலி உண்டாகலாம். அதனால், அவர்கள் சற்றே தட்டையான, காற்றோட் டமுள்ள காலணிகளை உபயோகிப்பது நல்லது.
கால்கள் மீது அதிக எடை அழுந்துவதால், ஆணிக்கால் நோய் ஏற்படுகிறது. இது, கால்களை தரையில் அழுந்த வைத்து நடக்க முடியாத அளவுக்கு, வேதனையை ஏற்படுத்தும்.
தோல் தடிப்பு, காய்ப்பு, நீர் கொப்புளங்கள் போன்ற வியாதிகளும் பாதங்களை சீர்குலைத்து விடும். பாத எலும்புகள் பெரியதாக வளர்ந்து விட்டாலும், பாதங்களில் வலி ஏற்பட்டு, நடப்பது கஷ்டம். கூர்மையான, மெல்லிய, உயரமுடைய செருப்புகளை அணிவதால், இப்படி ஏற்படுகிறது. பாதத்தின் தோல் தடிமனாகி விட்டாலும், பாதங்களில் வலி ஏற்படும். அதிக உடல் எடை மற்றும் தேய்ந்து போன செருப்புகளை உபயோகிப்பதால், இப்பிரச்னை ஏற்படுகிறது. பூஞ்சை, தொற்று நோய், அரிப்பு, சிறு சிறு கொப்புளங்கள் மற்றும் குதிகாலில் வெடிப்பு ஆகியவை பாதங்களில் ஏற்படும் பொதுவான பிரச்னை. இவற்றிலிருந்து விடுபட கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும். ஒரு நாளில், இரண்டு முறை பாதங்களை சுடுநீரில் கழுவி, நன்றாக துடைக்கவும். காட்டன் காலுறைகளையே உபயோகிக்க வேண்டும். அவை, எளிதில் வியர்வையை உறிஞ்சிக் கொள்ளும். நீச்சல் குளத்துக்கு அருகில், வெறும் காலுடன் நடக்காதீர். ஏனெனில், மற்றவர்கள் காலில் இருந்து நோய் தொற்ற வாய்ப்புள்ளது. நீச்சலுக்குப் பின் சுத்தமான நீரில் அவசியம் குளிக்கவும்.
நடைபயிற்சி: தினமும் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதனால், பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், பாதங்களின் ரத்த ஓட்டம் சீரடைந்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும், உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.