சனி, 3 மே, 2014

வெயிலில் அலையாதீங்க! சன் ஸ்ட்ரோக் சாதா விஷயமல்ல.


* சன் ஸ்ட்ரோக் சாதா விஷயமல்ல
* முன்னெச்சரிக்கை மிக முக்கியம்
உடலுக்கு வெப்பம் தேவை; அதுவே, அளவுக்கு மீறும் போது, வியர்வையாகவோ, தோல் வழியாகவோ வெளியேறி விடும். ஆனால், அதையும் மீறி வெப்பம் தாக்கும் போது, உடல் திணறிப்போய்விடும்.
இப்படிப்போகும் போது, உடலில் உள்ள வெப்பம் 41 செல்சியஸ் டிகிரியை தாண்டி விடும் போது தான் ஆபத்து காத்திருக்கிறது. அது தான் ‘சன் ஸ்ட்ரோக்’ ஆரம்பம். அந்த நிலையில், உடலில் நீர் வற்றிப்போகிறது; வெப்பம் அதிகரிக்கிறது. அதனால், உறுப்புகள் பாதிக்கின்றன; விளைவு, உச்சகட்டமாக மரணம் தான்.வெயிலுக்கு மரணம் என்று படிக்கிறோமே தவிர, எதனால் மரணம் என்பதை பெரும்பாலோர் உணருவதில்லை. விழிப்புணர்வு இருந்தால் பலிகளை தவிர்க்கலாம்.
தலைசுற்றல், வாந்தியா?
இதற்கு அறிகுறிகள் பல உண்டு; தொடர்ந்து, வெயிலில் அலைந்து கொண்டிருப்பவர்கள், அதிலும் வயதானவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, காய்ச்சல் போல உணர்வர்; தண்ணீர் மேல் தண்ணீர் குடிப்பர். ஆனால், வெப்பம் தாங்க முடியாது.
இது மட்டுமின்றி, வாந்தி, மயக்கம் ஏற்படும்; சோர்வு வரும்; படுக்கலாம் என்றால் தலை சுற்றும். கிறுகிறுப்பு தொடர்ந்து இருக்கும். சில சமயம், மாரடைப்பு போல, பெரும் வலி இருக்கும். தசைப்பிடிப்பு வெடிப்புகளும் ஏற்படும்.
திணறும் மூச்சு
உடலில் வெப்பம் ஏறிய நிலையில், வியர்வை வராது; மூச்சு திணறும்; உடலில் ஆங்காங்கு சிவந்து போகும். தடிப்பும், வெடிப்பும் ஏற்படும். எதிலும் கவனம் போகாது; இது தான் உச்சகட்டம்; உடனே டாக்டரிடம் போய்விடுவது தான் நல்லது.
உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை வெளியேற்ற போதுமான நீர்ச்சத்து தேவை. அப்படி இருந்தால் தான் தோல் வழியாக வியர்வையாக வெளியேறும். இல்லாவிட்டால், வெப்பம் தங்கி விடும்.இந்த நிலையை தான் தண்ணீர் வற்றிப்போய் விட்டதாக கருதுகிறோம். தண்ணீர் வற்றி விட்டால் சன் ஸ்ட்ரோக் வருவது நிச்சயம்.

யாருக்கு வரும்?
பெரும்பாலும் வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கு வரும். வெயிலிலேயே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வரும். அதனால், அவர்களை வெயிலில் அலைய விடாமல் செய்தால் தவிர்க்கலாம்.
இதய, சர்க்கரை, சிறுநீரக நோய்க்காக மருந்து சாப்பிடுவோர் , வெயிலில் போகவே கூடாது; அப்படி போனால், தற்காத்துக்கொள்வது நல்லது; அவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ வரும் வாய்ப்பு அதிகம்.
முதல் உதவி என்ன
வெயிலில் மயக்கம் அடைந்தோ, கிறுகிறுத்தோ போவோரை கண்டால், அவர்களை, நிழலில் மல்லாந்து படுக்க வைத்து, உடலை குளிர்ப்படுத்த வேண்டும்; தண்ணீர் தெளிக்க வேண்டும். பின், உடலில் இருந்து வியர்வை வெளியேற, அவர் அருகே மின்விசிறியை வைத்து காற்று வர வைக்க வேண்டும்.
தொடை இடுக்கு, கைகள் இடுப்பு, கழுத்து பக்கவாட்டு பகுதிகளில் ஐஸ் ‘பேக்கிங்’ வைக்கலாம்; அப்படி செய்தால், உடல் வெப்பம் 100 பாரன்ஹீட் டிகிரிக்கு குறையும்.அவருக்கு உப்பு – தண்ணீர் கரைசலை தரலாம்; இப்போது ‘எலக்ட்ரால்’ கரைசல் கடைகளில் விற்கப்படுகிறது. அதை தந்தால் அவர் உடல் வெப்பம் குறைந்து விடும்.
98.3 ஐ தாண்டக்கூடாதுங்க!
* நம் உடல் வெப்பம் 98.3 செல்சியஸ் டிகிரியாக இருக்க வேண்டும். இதை தாண்டினால், முதலில் காய்ச்சல்; அடுத்து ‘சன் ஸ்ட்ரோக்’ தான்.
* உடல் வெப்பத்தில் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல், தலைசுற்றல், கிறுகிறுப்பு, வாந்தி வரும். பெண்களுக்கு முகப்பரு வரவும் இது தான் காரணம்.
* வெயில் காலத்தில், அதிக தண்ணீர் குடிப்பதுடன், காபி, டீயை குறைத்து, தர்பூசணி சாப்பிடலாம்; அது போல, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களின் ஜூஸ் குடிக்கலாம்.
*பசலைக்கீரை உட்பட பச்சைக்கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதுபோல கேரட்டும் நல்லது.
*கோடை காலத்தில் அடிக்கடி உணவில் வெள்ளரி சேர்க்க வேண்டும்; தனியாகவும் சாப்பிடலாம்.
*வயிற்றுப் பிரச்னைகளுக்கு தயிர் நல்லது: முகத்தில் சுரசுரப்பு போகவும் அதை தடவலாம்.
*கொழுப்பு, ஜங்க் புட் உணவுகளை சாப்பிடுவதை குறைத்தால், தோல், முகம் வெயிலில் பாதிக்காமல் இருக்க செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.